வாடிகன்: சுலபமாக தொடர்பு கொள்ள வைப்பதன் மூலம் உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இண்டர்நெட் கடவுள் தந்த பரிசு எனப் பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ்.
கடந்த 1967ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க தேவாலயங்களில் உலக தொலைதொடர்பு தினம் கொண்டாடப் பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு நேற்று போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
இண்டர்நெட் என்பது கடவுளின் பரிசு. அதன் மூலம் உலகமே ஒரு குடும்பம் போல் உருவாகிறது. ஆனால் அதை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது சாத்தானின் வேலை என்றார்.
ஆனால் இவற்றை மக்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஒருவரையொருவர் திட்டிக்கொள்கிறார்கள்.
இண்டர்நெட் மூலம் ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களின் மூலம் பிரச்சனைகள் உருவாகின்றன. இது ஏற்புடையதல்ல' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் 9 மொழிகளில் தனது டுவிட்டர் கணக்கை வைத்துள்ளார், சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அவரை பாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.